பஞ்சு, கழிவு பஞ்சு மீது ஒரு சதவிகித வரி ரத்து

by Editor / 04-09-2021 05:08:58pm
பஞ்சு, கழிவு பஞ்சு மீது ஒரு சதவிகித வரி ரத்து

நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு சதவிகித வரி ரத்து செய்யப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்கள்.

விதி 110 -ன்கீழ் சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

நெசவாளர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும், நலத் திட்டங்களையும் வழங்கியது தி.மு.க. அரசு. அதன் தொடர்ச்சியாக, இப்போது நெசவுத் தொழிலை நம்பியிருக்கக்கூடிய நெசவாளர் தோழர்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஓர் முக்கிய அறிவிப்பினை 110 விதியின்கீழ் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இந்திய துணித்தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு துணித் தொழில் வகிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கை 1,570 ஆகும், இவ்வாலைகள்மூலம் நூற்கப்படும் நூல், நாட்டின் மொத்த நூற்புத்திறனில் 45 விழுக்காடு ஆகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 விழுக்காடு பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் 1987, பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1 விழுக்காடு விதிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தின்படி, பருத்தி பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) விதிக்கப்படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடு நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதனால், மாநிலத்தில் இந்தியப் பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்பொழுது, நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பராமரிக்க வேண்டியதில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில், இந்த வரியினை நீக்க வேண்டுமென்று தங்களது கோரிக்கையாக அவர்கள் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்டு, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டதிருத்தம் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே கொண்டு வரப்படவிருக்கிறது.இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள்.

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், காந்தி, செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (கம்யூனிஸ்ட்), சதர்ன் திருமலை குமார் (ம.தி.மு.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஆகியோர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்கள்.

அண்ணா தி.மு.க. உறுப்பினர் ஓ.எஸ். மணியன் பேசும்போது இந்த வரி குறைப்பு நேரடியாக நெசவாளர்களுக்கு செல்ல வேண்டும். மாறாக இந்த வரி ரத்து பஞ்சுமில், தொழில அதிபர்களுக்கு தான் போகும் என்று கூறினார்.வ.உ.சி. 150 வது பிறந்த நாளையொட்டி நேற்று விதி 110 ன் கீழ் முதலமைச்சர் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கும் அனைத்து கட்சி தலைவர்களும் நன்றி தெரிவித்தார்கள்

 

Tags :

Share via