கோழிக்கோடு விமான விபத்திற்கு விமானியின் தவறே காரணம்

by Editor / 12-09-2021 04:59:26pm
கோழிக்கோடு விமான விபத்திற்கு விமானியின் தவறே காரணம்

கடந்த ஆண்டு ஆக.,7 ல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 21 பேர் பலியாகினர்.இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: விமானத்தை தரையிறக்கும் போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே விமான விபத்து ஏற்பட காரணம். தொழில் நுட்ப கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை புறந்தள்ளி விட முடியாது.

விமானத்தை தரையிறக்கிய போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே இந்த விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம். விமானத்தை தரையிறக்கும் போது, நிலைத்தன்மையற்ற அணுகுமுறைகளை விமானி தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால், விமான கண்காணிப்பு தொழில்நுட்ப விமான இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல், தோல்வியடைந்ததும், விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியது, இந்த விமான விபத்துக்கான காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via