உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி கடிதம்

by Editor / 15-09-2021 04:05:02pm
உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி கடிதம்

 

உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமாருக்கு அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கட்டம் என்பது தேவையற்றது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது கூட 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை மிகக்குறுகிய காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சியையும், ஆட்சியில் இல்லாத மற்ற கட்சிகளையும் சாதகமற்ற நிலைக்கு கொண்டு சென்று விடும்.

வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும் என்ற சூழல் உள்ள நிலையில் சமூக விரோதிகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக ஒரேகட்டமாக தேர்தலை நடத்தவேண்டும்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சி தேவையற்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் என்ற கவலை எங்களுக்கு உள்ளது.

தேர்தல் பணியில் மாநில போலீசாருக்கு பதில் சி.ஆர்.பி.எப்., வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். மாநில போலீசார், தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.

 

Tags :

Share via