7 ஆண்டுகளாக கழிவறையில்  குடும்பத்துடன் வசிக்கும் பெண்

by Editor / 23-09-2021 05:49:36pm
7 ஆண்டுகளாக கழிவறையில்  குடும்பத்துடன் வசிக்கும் பெண்



கன மழையால் வீடு சேதமானதையடுத்து ஏழு ஆண்டுகளாக பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகள், மாமியாருடன் ஒரு சிறிய கழிவறையில் வசித்துவரும் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவரது கணவர் உடல்நலக் குறைவால் 2013ஆம் ஆண்டு உயிரிழந்தார். சுஜாதாவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.கணவர் இறந்ததையடுத்து சுஜாதா தனது பிள்ளைகளுடன் மாமியாருடன் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார். 


அந்த வீடு இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுஜாதா, ஒரு கூரை வீட்டை ஏற்பாடுசெய்தார். அந்த வீடு 2014ஆம் ஆண்டு பெய்த கனமழையினால் சரிந்து விழுந்தது.இதனால் வீடின்றி சுஜதாவும் அவரது குடும்பமும் தவித்துவந்தது. இந்நிலையில், அவர்கள் இருந்த பகுதியில் அரசால் கட்டப்பட்ட கழிவறையில்தான் தற்போது சுஜாதா தனது பிள்ளைகள், மாமியாருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக வசித்துவருகிறார்.

இது பண்பட்ட சமூகத்தில் உள்ள கொடுமையான அவலநிலையையே காட்டுகிறது.இவர்களது உடமைகள், மளிகைப் பொருள்கள், எல்லாம் கழிவறையினுள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சமையலும் அங்கேயே செய்யப்படுகிறது. இரவில் கழிவறையின் வெளியே சுஜதா தனது பிள்ளைகள், மாமியாருடன் உறங்குகிறார். மழை பெய்யும் நேரத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தங்குகின்றனர்.

 

Tags :

Share via