உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 குரங்குகள்  கொலை 

by Editor / 01-10-2021 07:19:37pm
உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 குரங்குகள்  கொலை 



கோலார் தங்கவயல்புறநகரில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 குரங்குகளை கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேலும் அந்த குரங்குகளின் உடல்களை மர்ம நபர்கள் சாக்கு பையில் திணித்து வீசியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 


கோலார் புறநகர் டகமா பகுதியில்  ஒரு பெரிய சாக்கு மூட்டை மர்மமான முறையில் கிடந்தது. அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி கல்பேட்டை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டையில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. 


அதாவது அந்த குரங்குகளை யாரோ மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று உடல்களை சாக்கு பையில் திணித்து டமகா பகுதிக்கு கொண்டு வந்து வீசிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குரங்குகளின் உடல்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குரங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 


இச்சம்பவம் குறித்து கல்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குரங்குகளை கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

 

Tags :

Share via