டாக்டர் படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை - சிவகார்த்திகேயன்

by Editor / 02-10-2021 07:47:20pm
டாக்டர் படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை - சிவகார்த்திகேயன்

 

தமிழ்த் திரையுல்கின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள படம் "டாக்டர்".இந்தப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் செய்துள்ளார்.


ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார்.இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து,கேஜேஆர் ஸ்டியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.


உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.நிகழ்வில்நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது..


இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா? என்று இயக்குநர் கேட்டார். நான் தயக்கத்தில் தான் ஓகே என்றேன். தாடி வளர்க்கச் சொன்னார் வளர்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் மிக அழகாக என்னைப் பயன்படுத்தியுள்ளார்.நான் பார்க்கத்தான் டெரர், உண்மையில் மிக பயந்த சுபாவம் தான். இந்தப்படம் ஒரு அழகான பொழுதுபோக்குப் படம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ரெடின் பேசியதாவது.


இந்தப்படம் மிக கலகலப்பாக இருந்தது. நான் நடித்த காட்சிகள் நிர்மல் கட் பண்ணிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. நெல்சன் என்னை வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார். படம் முழுக்க பிரமாண்ட செட் போட்டுத் தான் படம் எடுத்திருக்கிறோம். பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


நடிகை அர்ச்சனா பேசியதாவது.
இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எனக்கும் என் மகளுக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்தார்கள். இந்தப்படத்தில் ஒரு குடும்பமாகத் தான் வேலை பார்த்தோம் மிக அழகான படமாக, அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் போய்ப் பாருங்கள் நன்றி.


நடிகர் வினய் பேசியதாவது..
நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரியக் காத்திருக்கிறேன் நன்றி.
நாயகி பிரியங்கா அருள் மோகன் பேசியதாவது ..


இப்படம் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வாதமாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய அறிமுகப் படமே பெரிய படமாகக் கிடைத்தது மகிழ்ச்சி.சிவகார்த்திகேயன் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வளர்ந்துகொண்டே போகிறார் அவருக்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. அனிருத் இசை அட்டகாசமாக இருகிறது. அருண் எனக்கு அண்ணாவாக நடித்தார் உண்மையிலும் அண்ணாவாக இருந்தார். இப்படம் மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது. மிகப்பெரிய சந்தோசத்தைத் தந்துள்ளது. படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.
இயக்குநர் நெல்சன் பேசியதாவது..


முதலில் சிவகார்த்திகேயன் வழக்கமாக அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசித் தான் இப்படம் எடுக்கலாம் முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது.


சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னைக் கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் இருந்தது. விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததைக் கொண்டு வந்து விடுவார். முழுப்படத்தையும் எடிட் பண்ணியதற்கப்புறம், எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார்.


ப்ரியங்கா அவரது முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன். வினய் பார்த்துப் பழகும் போது அப்பாவியாக இருந்தார். ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்து தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசியதாவது..
நான் ஒரு படத்திற்கு நோ சொல்லியிருக்கிறேன் அதையும் தாண்டி இந்தப்படத்திற்கு அழைத்ததற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் மிகப்பெரிய பொழுதுபோக்குப் படமாக இருக்கும். நிறையக் காட்சிகளில் நான் சிரித்து, கேமரா ஆடி, டேக் கட்டாகியிருக்கிறது. அந்த அளவு இரசிகர்களை இந்தப்படம் சிரிக்க வைக்கும்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது..


இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்குப் பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்குப் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்தப்படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது.
வினய் உன்னாலே உன்னாலே படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டுத்தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும்.


ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ அவர் இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்குப் புரியும். அனிருத் தான் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவரே அவர்தான். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via