வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா-நிலச்சரிவு

by Editor / 17-10-2021 10:41:07am
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா-நிலச்சரிவு

கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என வானிவை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம் இடமலையாறு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இடமலையாறு அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்தது. இதனால் ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.

இதையொட்டி தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் முகாமிட்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம், முண்டகாயம் அருகே குட்டிக்கல் பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

 

Tags :

Share via