விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் பலி

மதுரை ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). டேங்கர் லாரி ஓட்டுநர். இவர் உசிலம்பட்டி அடுத்த மேலபெருமாள்பட்டியை சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் கருப்பசாமி (25) என்பவருடன் நேற்று திருமங்கலம் அடுத்த கப்பலூர் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் பெட்ரோல் பிடிக்க வந்திருந்தார். பின்னர், டீ குடிப்பதற்காக இருவரும், இருசக்கர வாகனத்தில் கப்பலூர் 4 வழிச் சாலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பாலகிருஷ்ணன் வாகனத்தின் மீது சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில், பாலகிருஷ்ணன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருப்பசாமி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :