மழையால் 1000 ஏக்கரில் கண்வலி பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை

by Editor / 10-11-2021 05:59:22pm
மழையால் 1000 ஏக்கரில் கண்வலி பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை

ஆண்டுதோறும் சுமார் 1500- ஏக்கர் பரப்பளவில் கண்வலி மூலிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் முக்கிய தொழில்களில் கண்வலி சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது.

தற்போது இந்தப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 1000- ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கண் வலி மூலிகை பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளங்குண்டல்,எடைக்கல்பாடி, குமாரபாளையம்,பொன்னிவாடி,போளரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 1500- ஏக்கர் பரப்பளவில் கண்வலி மூலிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சீசன் தொடங்கியுள்ள நிலையில் தொடர் மழை காரணமாக வாய்க்கால் வரப்புகளில் மழை நீர் தேங்கிய காரணத்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிஞ்சுகள் உதிர்ந்து பூக்கள் முற்றிலும் அழுகிய காரணத்தால்  விளைச்சல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கண் வலி மூலிகை விவசாய சங்க தலைவர் சுள்ளிபெருக்குபாளையம் லிங்குசாமி கூறியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூலனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 9 ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பிறகு சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ கண்வலி ரூ.1500 க்கு வந்தது. தற்போது இந்த ஆண்டு ரூ.2,500 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இது விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும். பொதுவாக ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய சுமார் 500 முதல் 750 கிலோ கண்வலி கிழங்கு தேவைப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கிழங்கு 450-க்கு விற்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு விதைப்பதற்கு கிழங்கு மட்டும் சுமார் 3 லட்சம் தேவைப்படுகிறது.

பிறகு அதற்கு கம்பி வேலி , உரம் ,மருந்து, வேலையாட்கள் கூலி மற்றும் பராமரிப்பு என ஒரு ஏக்கர் கண்வலி பயிர் சாகுபடி செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகிறது கடந்த ஆண்டு வரை விலை ரூ .2500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் வாய்க்கால் வரப்புகளில் மழை நீர் தேங்கி கண்விழி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கண்வலி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வரும் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக கண்வலி விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும். பயிர் கடன் வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

Tags :

Share via