சாப்டர் பள்ளி மாணவர்கள் பலி தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது
நெல்லை சாப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.இதனால் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து கட்சி தலைவர்களும் பள்ளி முன்பு குழுமினர்.
மேலும், பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் கட்டட ஒப்பந்தக்காரரை கைது செய்ய வேண்டும், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், தரச்சான்று அலுவலர் ஆகியோரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்களும் உறவினர்களும் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், எம் எம்எல்ஏ அப்துல் வகாப், கலெக்டர் விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் ராஜகண்ணப்பன் பேசுகையில், தலைமை ஆசிரியர் ஞான செல்வி, தாளாளர் செல்வகுமார், ஒப்பந்தக்காரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.உயிர் இழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
வருகிற 26-ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
Tags :