மனைவியை குத்தி கொன்ற கணவர் திருமணமான 5 மாதத்தில்

by Admin / 08-03-2022 05:31:31pm
 மனைவியை குத்தி கொன்ற கணவர் திருமணமான 5 மாதத்தில்

தூத்துக்குடி, தாளமுத்துநகர், பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து மாரியம்மாள் என்ற பெண்ணை  2வதாக திருமணம் செய்துகொண்டார். 

இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி  இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெரு சேர்ந்த ரவி மகன் பொன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொன்ராஜ், மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டு விட்டாராம். சில நாட்களுக்கு பின்னர் மாரியம்மாள் மருமகன் பொன்ராஜிக்கு போன் செய்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாராம். 

ஆனால், அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 
இந்நிலையில், நேற்று இரவு பொன்ராஜ் தனது நண்பர்கள் 2 பேருடன் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென  மனைவியை சராமாரியாக வெட்டியுள்ளார். 

இதனை தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் மாரிச் செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மாரிசெல்வி உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயம் அடைந்த தாயார் மாரியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாரி செல்விக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் அவரது மரணம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

இந்த கொலை தொடர்பாக பாென்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via