G-pay மூலம் கொள்ளையடித்த கல்லூரி மாணவி

by Staff / 28-03-2022 10:25:11am
 G-pay மூலம் கொள்ளையடித்த கல்லூரி மாணவி

அரும்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை பார்க்கும் பணியாளரின் மகள் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து 11. 90 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (58)இவர் சாலிகிராமம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இவருக்கு குழந்தைகள் ஏதும் கிடையாது. இவரது வீட்டில் வளர்மதி என்கிற 45 வயது பெண்மணி கடந்த 15 ஆண்டு காலமாக வீட்டு வேலை செய்து வருகிறார். 

இவருடன் இவருடைய மகள் சுமித்ரா (19) சிறுவயதிலிருந்தே இதே வீட்டில் அவரும் பணியாற்றி அகஸ்டின் தம்பதியருக்கு மகள் போலவே வளர்ந்து வந்துள்ளார். 

அகஸ்டின் அரும்பாக்கம் பகுதியிலேயே காலியான இடம் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்துள்ளார். அதனை கட்டுவதற்காக ஓய்வுபெற்ற போது வந்த 20 லட்சம் ரூபாயை சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி தனது வீட்டை கட்டுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று பணம் இருப்பை பரிசோதித்து உள்ளார் அப்பொழுது வங்கியில் வெரும் 8 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதுதொடர்பாக வங்கி மேலாளரை அணுகி தான் விருப்ப ஓய்வு பெற்று வந்த 20லட்சம் ரூபாய் பணத்தை உங்கள் வங்கியில் தானே டெபாசிட் செய்திருந்தேன். 

என் பணம் எங்கே என அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். அதன்பிறகு வங்கி பரிவர்த்தனைகளை மேலாளர் ஆய்வு செய்திருக்கிறார்.

அப்பொழுது அகஸ்டின் மொபைலில் கூகுள் பே மூலமாக இரண்டு வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதை வங்கி அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
 
கூகுள் பே எப்படி உபயோகிப்பது என்பது கூட தெரியாது என அகஸ்டின் வங்கியிலேயே கதறி உள்ளார் உடனடியாக அங்கிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு வங்கி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். 

இதனை அடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் அகஸ்டின் புகார் மனுவை அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

விசாரணையில் வீட்டில் வேலை பார்த்து வந்த வளர்மதியின் மகள் சுமித்ரா என்பவர்தான் அகஸ்டின் மொபைலிலிருந்து பிளே ஸ்டோர் மூலமாக கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து தனது காதலன் சதீஷ் குமார் என்பவருக்கு உள்ள இரண்டு வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனையை சிறுகச்சிறுக மாற்றி உள்ளது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் அகஸ்டின் புகார் கொடுத்தவுடன் சுமித்ரா மற்றும் காதலன் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் தலைமறைவாகி உள்ளனர். இதுதொடர்பாக அண்ணா நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை சைபர் கிரைம் போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வந்தார்கள்.

விசாரணையில் சுமித்ரா தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தன்னுடைய காதலனுடைய இரண்டு வங்கிக் கணக்கிற்கும் பணப் பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் தங்களை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பெங்களூர், கேரளா, மும்பை என பல்வேறு மாநிலத்தில் உல்லாசமாக சுற்றி திரிந்து வந்துள்ளனர். 

கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆகியும் தங்களை பிடிக்க முடியாத காரணத்தினால் சரி தாயைப் பார்த்து விட்டு செல்லலாம் என சுமித்ரா சென்னை கோயம்பேடு அருகே வந்துள்ளார் அப்பொழுது சைபர் கிரைம் போலீசார் சுமித்ரா மற்றும் அவருடைய காதலன் சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள். 

அதன் பிறகு அவர்களிடமிருந்து நான்கு புதிய செல்போன்கள் 79 ஆயிரம் ரொக்கப்பணம் 2.5 சவரன் தங்கச் செயின் மற்றும் புதிய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் இவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக அகஸ்டின் உறவினர் தீபா என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தனது சித்தப்பாவிற்கு அண்ட்ராய்டு தொலைபேசி உபயோகித்த கூட தெரியாது எனவும்  அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் சுமித்ராவை தனது மகளை போலவே வளர்த்து வந்துள்ளார். 

குறிப்பாக இரண்டு வருடங்களாக இந்தியன் வங்கியில் வந்து எந்த ஒரு குறுஞ்செய்திய தொலைபேசிக்கு வருவதில்லை எனவும் வங்கியின் மீது குற்றம் சாட்டி இருந்தார். வரும் காலங்களில் யாரை நம்புவது கூட என்பது தெரியவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via