தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில், தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு வருகிற நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மே 14ஆம் தேதியில் சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் பரிசோதனை கட்டணத்தை குறைக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ. 600-லிருந்து ரூ. 400 ஆகக் குறைக்கப்படுகிறது.
பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200லிருந்து ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.வீட்டிற்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கு மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்புக்கு அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் தமிழக மாநில தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் ,தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக அளவிலான கட்டணங்களை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
Tags :