கொலை, கொள்ளை வழக்குகளில்  ஆந்திராவில்  12 பேருக்கு தூக்கு

by Editor / 25-05-2021 04:33:08pm
கொலை, கொள்ளை வழக்குகளில்  ஆந்திராவில்  12 பேருக்கு தூக்கு



தீரன் பட பாணியில், ஆந்திர மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் துர்காபூரில் இருந்து கல்பாக்கத்திற்கு, இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர், லாரியுடன் மாயமானதாக லாரி உரிமையாளர் குப்புசாமி என்பவர் கடந்த 2008ம் ஆண்டு, ஓங்கோல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முன்னா என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், காவல்துறையினர் போல் வேடமிட்டு, பல லாரிகளை வழிமறித்து கடத்தியதும், லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை13 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், முன்னா உள்ளிட்ட 12 பேருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, ஓங்கோல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via