கிராமப்புறங்களில்  அத்தியாவசியப் பொருள்கள்  தடையின்றி வழங்க முதல்வர்  உத்தரவு

by Editor / 25-05-2021 05:38:13pm
கிராமப்புறங்களில்  அத்தியாவசியப் பொருள்கள்  தடையின்றி வழங்க முதல்வர்  உத்தரவு

 



 தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில், நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி விநியோகிக்க  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த  தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமெனமுதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்  தலைமைச் செயலகத்தில்,  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  முதல்வர் கேட்டறிந்துகொண்டார்.
தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆவின் நிறுவனம் மற்றும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு எவ்வித தடையுமின்றி விநியோகம் செய்கிறது.சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக வாகனங்களில் சென்று வணிகர் சங்கத்தினரின் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, 24ஆம் தேதி சென்னையில் ஆயிரத்து 670 வாகனங்கள் மூலம் 1,400 மெட்ரிக் டன்னும், இதர மாவட்டங்களில் 4 ஆயிரத்து 626 வாகனங்கள் மூலம் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும், ஆக மொத்தம் 6 ஆயிரத்து 296 வாகனங்கள் மூலம் 4 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
 கூட்டத்தில், பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.இந்தச் சேவை நகர்ப்புறங்களில் சிறப்பாக வழங்கப்படுவதைக் குறிப்பிட்டு பேசிய  முதல்வர், கிராமப்புறங்களிலும் அதைப் போல் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்களின் வசதிக்காக, அடுத்து வரும் நாட்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் போதுமான அளவில் தொடர்ந்து நியாயமான விலையில் கிடைத்திட, தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு  முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo