உறவுகள் மேலானவை: கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் பலி.இருவரது உடல்களும் ஒன்றாக அடக்கம்

by Editor / 11-09-2022 08:51:34am
உறவுகள் மேலானவை: கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் பலி.இருவரது உடல்களும் ஒன்றாக அடக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப்பகுதியிலுள்ள கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.சேகர் (வயது 65). இவரது மனைவி அஞ்சலி (60). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சேகர் வெள்ளிக்கிழமை இறந்துவிட்டார். கணவர் சேகர் இறந்ததும் அவரது மனைவி அஞ்சலி கணவரின் உடல் அருகே உட்கார்ந்து அழுதபடியே இருந்துள்ளார். உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர் ஆறுதல் கூறி உள்ளனர்.

தொடர்ந்து அழுதபடியே இருந்த அஞ்சலி நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து அவரை, உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அஞ்சலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி அஞ்சலியும் இறந்து விட்டதால் அவரது உறவினர்கள் நேற்று மாலையே, இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி குடியாத்தம் சுடுகாட்டில் கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்தனர்.

 

Tags :

Share via