அமைச்சர்களுக்கும் அரசு துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 13-09-2022 05:24:11pm
அமைச்சர்களுக்கும் அரசு துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று (13.09.2022) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சி அமைந்த பிறகு நடக்கக் கூடிய நான்காவது அனைத்துத் துறையினுடைய செயலாளர்கள் கூட்டம் இந்தக் கூட்டம். உங்கள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், அனைவரையும் ஒருசேரச் சந்திப்பது என்பது மிகமிக முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும், யாரும் தனியாகச் செயல்பட இயலாது.

ஒன்றோடு ஒன்று இணைந்தவை தான் அரசுத் துறைகள். எனவே, பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அடிப்படை வழிமுறையாக அமைந்திருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு துறைச் செயலாளரும் தங்கள் துறையை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை அனைவரும் அறிவதற்கு வாய்ப்பாக இம்மாதிரியான கூட்டுக் கூட்டங்கள் அவசியமானவையாக இருக்கின்றன என்பதையும் நாம் புரிந்தாக வேண்டும்.

அனைத்துத் துறையும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். அத்தகைய சிந்தனையுடன் தான் திட்டங்களைத் நாம் தீட்டி வருகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லியிருக்கிறோம்.

அதேபோல, மாவட்டங்களுக்கென தனியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள். இவற்றை முதல் கட்ட அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை நாம் தீட்டினோம்.

அடுத்த கட்டமாக அமைச்சர்கள், செயலாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் மூலமாக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அதன்பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளின் அடிப்படையில் சில திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு மூலமாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.


 மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

இப்படி பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்திருந்தாலும், அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அமைச்சர்களுக்கும், துறையைச் சார்ந்திருக்கக்கூடிய செயலாளர்களுக்கும் தான் இருக்கிறது.

இதில் ஒவ்வொரு துறையின் சார்பிலும், பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். துறை ரீதியான தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நான் இதனை பெருமையாகச் சொல்லி பாராட்டியும் இருக்கிறேன்.

ஒவ்வொரு துறை சார்பிலும் நிறைவேற்றப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களை நான் இங்கு பட்டியலிடுவதாக இருந்தால், அதுவே பல மணிநேரம் ஆகும்.

2021-22-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,680 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் நீங்கலாக, 1,580 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94 விழுக்காடு அறிவிப்புகள் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

2022-23-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1634 அறிவிப்புகளில், கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, 23 விழுக்காடு அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 12.09.2022 அன்றைய நிலவரப்படி பார்த்தீர்கள் என்றால், ஏறக்குறைய 57 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அதாவது 937 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்குரிய ஆணைகளுக்கு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் வெளியிடக்கூடிய வகையில் செயல்படுமாறு நம்முடைய அனைத்துத் துறையினுடைய செயலாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கான உற்சாகமும், ஆர்வமும் செயல்திறனும் தொடர வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களையும் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதையும் நான் உங்களுக்கு சுட்டிக் காட்டுவது எனது கடமையாகக் கருதுகிறேன்.

சில திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட்ட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக சிந்தித்துக் கொண்டே இருந்து விடக் கூடாது.

நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை தான். எனவே, எந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், முதலமைச்சரால், மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தைப் பெறும். அது இயற்கை தான். அப்படி கவனம் பெறும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும்.

குறிப்பிட்ட சில அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது.

இவற்றில் துறைச் செயலாளர்கள் இதுபோன்ற இனங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

துறை ரீதியாக நான் உங்களோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன். அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது.

இதே போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறதா? என்றால் ஒருசில துறைகளில் இல்லை.

அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும், தொய்வும் ஏற்படுகிறது. எனவே, அதனை சரிசெய்திட இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்புக் கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடல் கூட்டங்களை உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளோடு தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும் என்றும், கள ஆய்வுகளில் நீங்கள் ஈடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துத் துறைச் செயலாளர்களும், திட்டங்களுக்கான ஆணைகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், கள அளவிலே அத்திட்டங்கள் கடைகோடியிலுள்ள பயனாளிகளையும் சென்றடைவதையும், உறுதி செய்ய வேண்டும். இதற்காகவே, இந்த அரசு பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மூத்த I.A.S., அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளது.

இவர்களுடைய செயல்பாடுகளை நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அவர்களுடைய பணியில் சிறக்கத்தக்க ஆலோசனைகளை அளித்து உதவிடுமாறு இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்களுக்கும் துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன்.

இது எங்கும், எப்போதும், எந்தத் துறையிலும் எந்த சூழலிலும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டியது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும், துறைச் செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயம் அவசியம் ஆகும்.

ஆட்சியில் இருப்பவர் இடும் கட்டளையைச் செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள, உங்களது கனவுத் திட்டங்களையும், அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த நீங்கள் முனைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :

Share via