கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 30 தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் . இவரது மனைவி சுபா, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். அவரது மனைவி சுபா மற்றும் மகன் முரளி பாரதி கணவரின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில், இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தாய் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :