2 வீரர்கள் செய்த தவறு என்ன ?  இந்திய அணி முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா

by Editor / 24-07-2021 07:35:11pm
2 வீரர்கள் செய்த தவறு என்ன ?  இந்திய அணி முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஆரம்பமாகிறது.


இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய அணி மோதவுள்ளது. இதனால், கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை, இங்கிலாந்தில் இந்திய அணி முகாமிடவுள்ளது. இதனிடையே, இந்த இரு தொடர்களிலும், தேர்வாகாத இந்திய வீரர்களைக் கொண்டு, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிராக 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில், ஜூலை மாதம் மோதவுள்ளது.


இதற்காக, 5 நெட் பவுலர்களுடன் மொத்தம் 25 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்த நிலையில், கோலி, ரோஹித் ஆகியோர் இல்லாத காரணத்தினால், இந்திய அணியை ஷிகர் தவான் வழி நடத்தவுள்ளார். இதில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான படிக்கல், சக்காரியா, நிதிஷ் ராணா உள்ளிட்ட சில இளம் வீரர்கள் இடம்பெற்ற போதிலும், சீனியர் வீரர்களான ஜெய்தேவ் உனத்கட், ஷெல்டன் ஜாக்சன், சித்தார்த் கவுல் போன்ற வீரர்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


இந்நிலையில், இலங்கை தொடருக்கான இந்திய அணி குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா  சில கேள்விகளை முன் வைத்துள்ளார். 'இதற்கு முந்தைய தொடர்களில், இடம்பெற்றிருந்த ஜெய்தேவ் உனத்கட் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் பெயர் இடம்பெறாதது, எனக்கு கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்படி அந்த இரண்டு வீரர்கள், என்ன தவறு செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை.இந்திய அணி தேர்வு செய்துள்ள 20 வீரர்களில், 5 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஏன் இத்தனை சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளனர் என்பதும் எனக்கு புரியவில்லை.
25 பேரை எடுத்ததற்கு பதிலாக, உனத்கட் மற்றும் டெவாட்டியா ஆகியோருடன் 27 பேரை எடுத்திருந்தால் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்திருக்காது' என தீப் தாஸ்குப்தா கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags :

Share via