பாலியல் புகாரில் சிக்கிய  காவல் துறை எஸ்.பி. சஸ்பெண்ட்

by Editor / 12-06-2021 06:12:34pm
பாலியல் புகாரில் சிக்கிய  காவல் துறை எஸ்.பி. சஸ்பெண்ட்

 

 நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக சார்லஸ் பணியாற்றிவருகிறார். இவர் ஏற்கெனவே  பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பியாகவும், கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பணியாற்றி வந்தார்.
அங்கு பணியாற்றிய பெண் காவலரிடம் சார்லஸ், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் காவலர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். இப்புகார் டிஜிபியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்பு தான் ஈரோட்டிலிருந்து பணியிடம் மாற்றப்பட்டார் . ஆனாலும் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இச்சூழலில் சார்லஸை பணியிடை நீக்கம் செய்து, உள்துறை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியிடை நீக்க உத்தரவு, கோவை சரக டிஐஐஜி முத்துசாமி வாயிலாக, நீலகிரி மாவட்ட எஸ்பி மூலம் சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டது. பணிபுரியும் இடத்திலேயே சார்லஸ் தங்கியிருக்க வேண்டும் எனவும் அரசின் அனுமதியில்லாமல், அவர் வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஷ் மீது பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via