பேரறிவாளன் தாயார் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை!

by Editor / 13-06-2021 11:09:05am
பேரறிவாளன் தாயார் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை!

கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த நிலையில், பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை பல தரப்பில் இருந்தும் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளனுக்கு நீரிழிவு (Diabetes) மற்றும் சிறுநீரக நோய்த்தொற்று உள்ளதால், கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டும், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஒரு மாதங்கள் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக்  கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து, உத்தரவிட்டது. இதை அடுத்து தேவையான மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பேரறிவாளன் கடந்த 28-ம் தேதி ஒரு மாதம் ஜாமீனில் வெளி வந்தார். அவர் ஜாமீனில் நான்காவது முறையாக தனது வீட்டுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளதால், இனிமேல் சிறைக்கு அவரை சிறைக்கு அனுப்பாமல் இருக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவண செய்ய வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் பேரறிவாளன் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்கு சிறிய அளவில் மருத்துவம் கிடைத்தாலும், தொடர்சியான மருத்துவ சிகிச்சை கிடைப்பது இல்லை. இதனால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர் சிகிச்சை பெறும் வகையில், இனி பேரறிவாளன் சிரை செல்லக் கூடாது என அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என சில நாட்களுக்கு முன் மதிமுக தலைவர் வைகோவும் (Vaiko) தொடர்ந்து கோரிக்கைவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via