செயின் பறிப்பின்போது கணவன் கண் எதிரே மனைவி கொலை!

by Editor / 13-06-2021 10:47:28am
செயின் பறிப்பின்போது  கணவன் கண் எதிரே மனைவி கொலை!

குமாரபாளையம் அருகே காரை வழிமறித்து காரில் இருந்த தம்பதியினரை தாக்கி 7 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. செயின் பறிப்பின்போது கழுத்து நெரிபட்டு மனைவி கொலை செய்யப்பட்டதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞரான சபரிநாதன் என்பவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் இருவரும் அந்தியூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கவின் பிரசன்னா என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தரணி தேவிக்கும் அவருடைய கணவர் சபரிநாதனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தரணி தேவி ஆத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று ஆத்தூரில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற சபரிநாதன், தனது மனைவியை சமரசம் செய்து நேற்று ஆத்தூரில் இருந்து காரில் அழைத்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்துகொண்டிருந்த போது மூன்று நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து கத்திமுனையில் தம்பதியை தாக்கி, தரணி தேவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள் இந்த போராட்டத்தில் தரணி தேவி மயக்கமடைய, செயினை பறித்த கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட சபரிநாதன் தனது மனைவி மயக்கமானதை அடுத்து, உடனடியாக அருகில் இருந்த ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு தரணி தேவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு போக்குவரத்து கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பெண்ணின் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடி வருகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயின் பறிப்பின்போது  கணவன் கண் எதிரே மனைவி கொலை!
 

Tags :

Share via