மருத்துவமனை நிர்வாகத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம்

by Editor / 10-10-2022 11:25:51pm
மருத்துவமனை நிர்வாகத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட செருவலூர் கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன் என்பவரது மகன் விக்னேஷ் வயது 24. இவர் கடந்த ஏப்ரல் 22 2017 ல் தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் விழுந்து தீக்காயம் அடைந்து திருவாரூர் தஞ்சை சாலையில் உள்ள நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார். 

அதனைத் தொடர்ந்து 35 நாட்கள் விக்னேஷிற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 26 5 2017  விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் விக்னேஷின் பெற்றோர்களிடம் உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டதாகவும் நன்னிலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டதாகவும் கூறி உடலை எடுத்துச் சென்று உடனே எரியூட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். 

இதனை நம்பிய பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுரைப்படி செய்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விக்னேஷின் இறப்புச் சான்றிதழ் மற்றும் டிஷ்ஜார்ஜ் சம்மரி மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டணத்திற்கான பில் ஆகியவற்றை கேட்டுள்ளனர்.அதற்கு தங்கள் மருத்துவமனையில் இறப்பை பதிவு செய்யும் வழக்கம் இல்லை என்றும் உடலை நாங்கள் பிரேத பரிசோதனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து பெற்றோர்கள் நன்னிலம் காவல் நிலையத்தில் மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த போது அதுவும் பொய் என்று தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து 16.02.2019 அன்று பெற்றோர் தரப்பில் இருந்து வழக்கறிஞர் மூலம் மருத்துவனை நிர்வாகத்திற்கு அறிவிப்பு அனுப்பப்படுகிறது.அதன்படியும் மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ளாததையடுத்து விக்னேஷின் தந்தை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார். 

இந்த வழக்கு விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விக்னேஷ் தங்களது மருத்துவமனையில் இறக்கவில்லை என்றும் கடந்த 26.05. 2017 அன்று 9:00 மணிக்கு அவரது உடலை பெற்றோர்கள் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாக கூறி அந்த ஊரைச் சேர்ந்த ஆறு பேர் கையொப்பமிட்டு கொடுத்துள்ளதாகவும்,கேஷ் ஷீட் ஒன்றையும் மேலும் தங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 86,451 விக்னேஷின் பெற்றோர் வழங்க வேண்டும் எனவும் அதனை நவஜீவன் மருத்துவமனை தலைவர் கார்த்திகேயனே செலுத்தி விட்டதாகும் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு  விக்னேஷ் தீயில் உடல் கருகி எதிர் தரப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டவுடன் அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு உடனடியாக முயற்சி செய்து விட்டு பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில்  தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் என்பது டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஹெல்த் சர்வீஸ் கமிட்டி மூலம் கொடுத்த தீர்மானத்தின் முக்கியமான நடைமுறையாகும் எனவும்,அவ்வாறு செய்யாமல் விக்னேஷ் என்பவருக்கு சுமார் 35 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை கொடுத்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. 

மேலும் இது சம்பந்தமாக வழக்கு தொடுக்கப்பட்டால் அது முடியும் வரை நோயாளியின் மருத்துவ பதிவேடுகள் ஆகியவை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் விதி.அதனை மீறி எதிர்த் தரப்பினர் புகார்தாரின் மகன் விக்னேஷ் என்பவர் தீக்காய சிகிச்சைக்கு அனுமதித்து 35 நாட்கள் உள்நோயாளியாக மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்தும் அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரியப்படுத்தாமலும்  சிகிச்சையளித்ததற்கான கேஷ் ஷீட் டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவர்களை பத்திரமாக வைத்திருக்காமலும் அதனை பெற்றோருக்கு வழங்காமல் இருப்பதிலிருந்தும் விக்னேஷ் மருத்துவமனையிலேயே உயிரிழந்திருப்பார் என இந்த ஆணையம் கருதுகிறது. 

மேலும் விக்னேஷை ஆறு நபர்கள் கையெழுத்திட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டதாக சமர்ப்பித்த ஆவணத்தில் அந்த ஆறு நபர்களின் கையெழுத்து வேறுபடுவதுடன் அவர்களது முகவரி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.மேலும் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கேஷ் வீட்டில் கையொப்பப் முத்திரை புகைப்படம் ஆகியவை இல்லை என்று தெரிய வருகிறது. விக்னேஷின் இறப்பு சான்றிதழ் மற்றும் அதனைத் தொடர்ந்து எந்த செயலும் புகார்தாரரால் செய்ய முடியாமல் போனதால் புகார்தாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு  மருத்துவமனை நிர்வாகம் 3 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விக்னேஷின் இறப்பை ஒத்துக் கொள்ளாமல் இருந்தும் அதற்கான எந்த அறிவிப்பும் புகார்தாரருக்கு வழங்காமல் உள்ளதால் அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழை பெற முடியாமல் இருந்துள்ளார் என இந்த ஆணையும் கருதுகிறது. 

எனவே விக்னேஷின் இறப்பு குறித்து முறையாக சான்று வழங்கி அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழ் முறையாக பர்த்&டெத் ரிஜிஸ்ட்ரேஷன் ஆக்ட் பிரகாரம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என்றும்,வழக்கு செலவுத்தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தை எதிர்த்தரப்பினருக்கு வழங்க வேண்டும்  என்றும் விக்னேஷ் இறப்புச் சான்றிதழை முறையாக பெறுவதற்கு வழிவகை செய்து ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும்.இந்த தொகையினை உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via