மனைவியை கொலை செய்த கணவன்

by Staff / 23-10-2022 12:54:38pm
மனைவியை கொலை செய்த கணவன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புத்தூர்வயல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகனன். இவரது மனைவி உஷா என்பவரை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை என கூடலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், கூடலூர் போலீசார் உஷா காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், காணாமல் போனதாக சொல்லப்படும் உஷாவின் கணவர் மோகனனும் போலீசாருக்கு உதவியாக இருந்திருக்கிறார்.

காணாமல் போன உஷா குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவரது கணவரிடம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகனன் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு முரணாக பதில் அளித்து இருக்கிறார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில் தனது மனைவியை கொலை செய்து, காரில் எடுத்துச் சென்று பாடந்துறை பகுதியில் உள்ள குப்பைகளை கொட்டும் இடத்தில் வீசியதை ஒப்பு கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குப்பகளோடு கிடந்த உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகனனிடம் நடத்திய தொடர் விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே சிறிது காலமாக பிரச்னை இருந்திருக்கிறது. சம்பவ தினத்தன்று இருவருக்கிடையே அடிதடி ஏற்பட்டிருக்கிறது. இதில் மோகனன், தனது மனைவி உஷாவை பலமாக தாக்கியதில் அவர் சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
 

 

Tags :

Share via