நெல்லை -மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் கைது

by Editor / 24-06-2021 08:45:20pm
நெல்லை -மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் கைது

 

நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள வடக்கு வாகைக்குளம் நாடார் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன் (30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பேபி ரம்யா (27). இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு உதயா (6) என்ற மகளும், அசார் (4) என்ற மகனும் உள்ளனர். பேபி ரம்யா அடிக்கடி செல்போனில் பேசியதால் மனைவியின் நடத்தையில் மாரியப்பன் சந்தேகம் அடைந்துள்ளார். 
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேபி ரம்யா, கணவரை பிரிந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் தேவர் கல்யாண மண்டபம் அருகில் உள்ள பாண்டி என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இதையடுத்து மனைவியை காணவில்லை என்று மாரியப்பன் மானூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் பேபி ரம்யா தேவிபட்டணத்தில் இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து மாரியப்பன் தனது மனைவியை வடக்கு வாகைக்குளத்திற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாரியப்பன் கட்டிட வேலைக்குச் சென்று விட்டார். அவர் வீட்டிற்கு வருவதற்குள் பேபி ரம்யா தனது குழந்தைகளை விட்டு விட்டு தேவிபட்டணத்திற்கு வந்துவிட்டார். இந்நிலையில் இன்று காலையில் தேவிபட்டணம் வந்த மாரியப்பன் தனது மனைவியை தன்னுடம் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு பேபி ரம்யா மறுக்கவே, ஆத்திரமடைந்த மாரியப்பன் அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். 
இதனால் படுகாயமடைந்த பேபி ரம்யா சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து மனைவியை படுகொலை செய்த மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பேபி ரம்யா உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை புளியங்குடி டி.எஸ்.பி.,(பொ) கணேசன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

 

Tags :

Share via