2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று வர்ணிக்கப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீப திருவிழா, கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அலங்காரங்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் அதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அருகே உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுவதைக் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் விண்ணதிர தரிசித்தனர். ஆண்டுக்கு ஒருமுறையே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அண்ணாமலையார் காட்சியளித்ததும் பக்தி பரவசத்துடன் மக்கள் வழிபட்டனர். மகா தீபம் ஏற்றுவதற்காக சுமார் 4500 லிட்டர் நெய் மற்றும் சுமார் 1100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Tags :