திருமணமாகாத விரக்தியில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

by Staff / 06-01-2023 12:16:49pm
திருமணமாகாத விரக்தியில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளத்துபாளையம் அருகே உள்ள ஆராம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(57). இவருடைய மகள் மாலினி ஸ்ரீ(26). இவர் பி. டெக். ஐ. டி. முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக ஆராம்பாளையம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாலினி ஸ்ரீக்கு பெற்றோர் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சரியான வரன்கள் அமையவில்லை.இதனால் மாலினி ஸ்ரீ மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார். இது குறித்து வீட்டில் யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி மாலினி ஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னர்தான் அவர் விஷம் குடித்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாலினி ஸ்ரீயை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாலினி ஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via