திராவிடர் கழகம் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

by Editor / 01-07-2021 07:18:12pm
திராவிடர் கழகம் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

நீட் தேர்வு தாக்கத்தை ஆராய குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கில், திராவிடர் கழகம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 32 கட்சி மற்றும் இயக்கத்தினர் தங்களை எதிர்மனுதாரராக இணைத்துக்கொள்ள கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத்தேர்வு தாக்கத்தை ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் சமூகநீதியாளர்களின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் தி.க., திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட 32 கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
இதில் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாஜக தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் எதிர்மனுதாரர்களாக தங்களை இணைத்து கொண்டு நீட்டிற்கு எதிரான வாதங்களை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் வாதிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Tags :

Share via