அறநிலையத்துறை பணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடித்தவர்கள் சிறை சென்றனர்.

by Editor / 05-02-2023 01:19:26pm
அறநிலையத்துறை பணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடித்தவர்கள் சிறை சென்றனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவர் தன் மகளுக்கு அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திராஜ் மகன் சரவணக்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். சரவணகுமார், “நான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். இந்து சமய அறநிலையத் துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன்” என கூறியுள்ளார்.

தன் கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் (33), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (34) மற்றும் சுதாகர் (37) ஆகிய நபர்களுடன் இணைந்து வசூல் வேட்டை நடத்தியுள்ளார். சந்தானகிருஷ்ணனிடம் இருந்து மட்டும் ரூ. 21 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். சிறிது நாள்களிலேயே அது போலி ஆணை என்று தெரியவந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சந்தானகிருஷ்ணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர். நேற்று சரவணகுமார் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸ் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதேபோல, அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via