விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விமானத்தில் பறந்தனர்.

by Editor / 08-02-2023 09:26:37am
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விமானத்தில் பறந்தனர்.


தூத்துக்குடியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பாரதியார் வித்யாலயம் என்ற பள்ளியில் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக ஆசிரியர் ரமா என்பவர் கூறி இருந்தார். அதன்படி பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் தொடர்ச்த்து வந்த  12 மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற முடிவு செய்யப்பட்டது.

பள்ளி நிர்வாகம் பங்களிப்பில், 12 மாணவர்களும் விமானத்தில் சென்னை அழைத்து செல்லப்பட்டனர். வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர். பின்னர் ரயில் மூலம் மாணவர்கள் தூத்துக்குடி சென்றனர்.

பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வதற்கும், உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வதற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைக் கண்டு இனிமேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார்.

அதற்கு நல்ல பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது. எனவே மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலர் ஏபிசிவீ. சண்முகமுகத்துடன் ஆசிரியர் ரமா கலந்தாலோசித்ததில் பள்ளி நிர்வாகம்  அனுமதி வழங்கியதுடன் பயணச் செலவிலும் பங்களிப்பதாக கூறினார்கள்.

நன்கொடையாளர் ஒருவரும் மாணவர்களது விமான பயணத்திற்கு  உதவி அளிக்க முன்வந்தார். எனவே வகுப்பில் உள்ள 12 மாணவர்களையும் விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்தார்கள். அதன்படி நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தனர்.

சென்னையில்  வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை,தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியையும் கண்டு களித்தனர்.பின்னர் முத்து நகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர். இதன் மூலம் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாரியப்பன், ஆவுடையப்பன், ரகுபதி, ஆறுமுகசாமி ,
சங்கரேஸ்வரி ஆறுமுகசாமி, சங்கரபாகம், கெளரி சங்கர், ரவீந்திரன் , மீனா ரவீந்திரன் ஆகியோர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு , பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சுற்றுலாவில் மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ்வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றிருந்தனர்.

 

Tags :

Share via