ரூபாய் 6 லட்சம் திருட்டு.சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது.

by Editor / 09-02-2023 09:04:55am
 ரூபாய் 6 லட்சம் திருட்டு.சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது.

 

கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷேக்முகஹம்மது மகன் செய்யது முஹமது புஹாரி (37) என்பவர் தனது தங்கையின் கணவரான  அப்துல் ரஹீம் என்பவருக்கு சொந்தமான கோவில்பட்டி, கடலையூர் ரோடு, சண்முக நகரில் தீப்பெட்டிகளுக்கு தேவையான தீக்குச்சி தயாரிக்கும் கம்பெனியை நிர்வாகம் செய்து வருகிறார்.

இவர் தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக கடந்த 13.12.2022 அன்று காலை எட்டையாபுரம் ரோட்டில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் 6 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் சைடு பெட்டியை திறந்து வங்கியில் எடுத்த பணத்தை வைத்து பூட்டி கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் மெயின்ரோட்டில் சத்தியபாமா தியேட்டர் நுழைவு வாயில் எதிரே உள்ள சிவா எண்டர்பிரைசஸ் பசை கம்பெனிக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் தங்கள் கம்பெனிக்கு வரவேண்டிய பில்லை வாங்கி கொண்டு தனது கம்பெனிக்கு திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூபாய் 6 லட்சம் பணத்தை யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து  செய்யது முஹம்மது புஹாரி கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து  தூத்துக்குடி  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் காந்தி,  சிறப்பு உதவி ஆய்வாளர் கனகசுந்தரம், முதல் நிலைக்காவலர் செல்லத்துரை மற்றும் கோவில்பட்டி உதவி ஆய்வாளர் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர்  முருகன், முதல்நிலைக் காவலர்  சுரேஷ் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து, திருடிய பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டார்.

மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் சென்னை, வில்லிவாக்கம் ராஜமங்களத்தைச் சேர்ந்த தேவதாஸ் பாபு என்பவரது மகன் 1) சக்கரைய்யா , அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் 2) பிரசாந்த் என்ற கௌதம் என்ற சின்னா மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் சேர்ந்து மேற்படி பணம் ரூபாய் 6 லட்சத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட மேற்படி எதிரிகளை தேடி வந்த நிலையில் இன்று (08.02.2023) காலை கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய செக்போஸ்டில் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக வந்த TN 11 E 2029 என்று பதிவு எண்ணுடைய யுனிகார்ன் மோட்டார் சைக்கிளில் வந்த எதிரி சக்கரைய்யாவையும், TN 67 BX 9013 சூப்பர் ஸ்பிளண்டர் மோட்டார் சைக்கிளில் வந்த எதிரி பிரசாந்த் என்ற கௌதம் என்ற சின்னா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி எதிரிகள் திருடிய பணத்தை பிரித்துக்கொண்டதில் ரூபாய் 1,00,000/-ஐ தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரி வைத்துக்கொண்டதாகவும், மீதம் உள்ள பணத்தை தலா 2,50,000/- என்று பிரித்து வைத்துக்கொண்டதாகவும், அதில் சக்கரைய்யா ரூபாய் 28,000/- செலவு செய்தது போக மீதம் வைத்திருந்த 2,22,000/-ஐயும், பிரசாந்த் என்பவர் ரூபாய் 20,000/- செலவு செய்தது போக மீதம் வைத்திருந்த ரூபாய் 2,30,000/-யும் ஆக மொத்தம் ரூபாய் 4,52,000/-ஐ இருவரும் ஆஜர் செய்ததை கைப்பற்றி, திருட்டிற்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி எதிரிகள் இருவரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1 அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்னர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரியையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்து,  திருடிய பணத்தில் ரூபாய் 4,52,000/-ஐ மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.
 

 ரூபாய் 6 லட்சம் திருட்டு.சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது.
 

Tags :

Share via