இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – சரத் பொன்சேகா
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்ல்ஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டனர். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. போராட்டத்தில் தனது குடும்பத்தையே அர்ப்பணித்தவராக பிரபாகரன் திகழ்கின்றார் என இறுதிப் போரை வழி நடத்திய முன்னாள் ராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.
அவர்களில் ஒருவர் தான் பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலம் முதல் இன்று வரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர், பிரபாகரன் மட்டுமன்றி அவரின் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், மூவரும் நலமாக உள்ளார்கள் என்றும் மேலும் பொய்யான தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags :