ரூ.21 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய 2 பேர் கைது - 

by Editor / 24-03-2023 10:41:51am
ரூ.21 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய 2 பேர் கைது - 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர்  வீரசோலை தலைமையில் உதவி ஆய்வாளர்  சுதாகர் மற்றும் காவலர்கள்  கோட்டிமுத்து,  மாரிஸ்வரன் ஆகியோர்கடந்த (23.03.2023) அதிகாலை விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் to மதுரை ரோடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டபோது அப்பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையின் சுவரிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் கீழே இறங்கிக் கொண்டிருந்தவரை மேற்படி போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் வள்ளிநாயகபுரம் காலனி தெருவைச் சேர்ந்த முத்துவேல் மகன் மாரிமுத்து (34) என்பதும் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்வதில் அவரது கூட்டாளியான மார்த்தாண்டம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (36) என்பவர் கடையின் பின்பக்கம் சுவர் அருகே பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அந்த நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி போலீசார் மாரிமுத்து மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட மொத்தம் ரூபாய் 21 இலட்சத்து 65ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி தீவிர ரோந்து பணி மேற்கொண்டு எதிரிகளை கையும் களவுமாக கைது செய்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்ட உதவி ஆய்வாளர்  சுதாகர், காவலர்கள் கோட்டிமுத்து,மாரிஸ்வரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

ரூ.21 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய 2 பேர் கைது - 
 

Tags :

Share via