பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

by Editor / 09-05-2023 10:50:26pm
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  அறிவிப்பு.

ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் இவ்வாண்டு நடைபெறும்  வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது உற்சவ திருவிழா வருகிற 12.05.2023 முதல் 14.05.2023 வரை நடைபெற உள்ளது.

1.     இவ்விழாவிற்கு நான்கு சக்கர வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது ஒரு நபர் மட்டுமே ஜோதியுடன் நடந்துவர அனுமதிக்கப்படுவர். மற்ற இளைஞர்கள் நடந்து வரும்போது கம்பு, அருவாள், கத்தி, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது. மீறும்பட்சத்தில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்படும்.

2.     இவ்விழாவிற்கு திருச்செந்தூரிலிருந்து மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை சார்பாக எடுத்துவரப்படும் ஜோதியுடன் ஒரு வாள் மட்டும் எடுத்துவர அனுமதிக்கப்படுகிறது.

3.    மேற்படி விழாவிற்கு வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது கண்டிப்பாக மற்ற சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி எவ்வித கோசங்களையும் எழுப்பக்கூடாது. தேவையில்லாமல் வரும் வழியில் ஜோதியை நிறுத்தி கூட்டத்தை கூட்டி பொதுமக்களுக்கும், போக்குவரத்திறகும் இடையூறு செய்யக்கூடது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்படும்.

4.    மேற்படி விழாவில் கலந்து கொள்ள குறுக்குச்சாலை வழியாக வரும்     வாகனங்கள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களான   குறுக்குச்சாலை, கக்கரம்பட்டி விலக்கு, மீனாட்சிபுரம், ஒட்டப்பிடாரம் பஜார் வழியாக பாஞ்சாலங்குறிச்சி வரவேண்டும்.

5. மேற்படி விழாவில் கலந்து கொள்ள புதியம்புத்தூர் மற்றும் ஓசநூத்து வழியாக வரும் வாகனங்கள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களான ஓட்டப்பிடாரம் வழியாக பாஞ்சாலங்குறிச்சி வர வேண்டும்.

6. மேற்படி விழாவில் கலந்து கொள்ள பசுவந்தனை வழியாக வரும் வாகனங்கள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களான கீழமுடிமன் வழியாக பாஞ்சாலங்குறிச்சி வர வேண்டும்.

7. மேற்படி விழாவிற்கு வாகனங்களில் ஜோதி கொண்டுவரும் நபர்கள் பற்றிய  விபரத்தை சரியான முகவரியுடன் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.

8. வாகனங்களின் மேற்கூரைகளில் அமர்ந்து செல்லக்கூடாது. மேற்படி விழாவிற்கு வரும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி எதுவும் பொருத்தக்கூடாது. இருசக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

9. வாகனங்களில் வருபவர்கள் திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதிக்கபட மாட்டாது.

10. மேற்படி விழா நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி எதுவும் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி கிடையாது.

11. மேற்படி விழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் பாஞ்சை சந்ததியினர் காலனிக்கு மேல்புறம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக விழா கமிட்டியாளர்கள் 'வாகனம் நிறுத்துமிடம்’’ என தகவல் பலகை வைக்க வேண்டும்.
 
12. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் காவல்துறையின் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெற காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

13. வாகனத்தில் செல்வோர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால்  சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

14. 14.05.2023ம் தேதி காலையுடன் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் இதர பூஜைகளையும் நடத்தி விழாவினை அமைதியாக முடித்துக் கொள்ள வேண்டும்.

15. விழா கமிட்டியாளர்கள் காவல்துறை மறறும் வருவாய்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

16. விழாவிற்கு வரும் நபர்கள் எக்காரணம் கொண்டும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது.

17. விழாவின்போது ஜோதி கொண்டுவருவது, வாகனங்களை நிறுத்துவது, வழித்தடங்கள் போன்ற நிகழ்வுகளை காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.

18. விழாவிற்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் உரிய பேரூந்து வசதிகளை விழா கமிட்டியினர் அமைத்து கொடுக்க முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

19. வாடகை வாகனங்களில் வர அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கிகள் மற்றும் கேரியர் பொருத்திய வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

20. ஜோதி எடுத்து வருபவர்கள் காவல்துறையினர் சொல்லும் வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்கள் மீது ஏறிக்கொண்டோ கோசங்கள் போட்டுக் கொண்டோ செல்லக்கூடாது.

21. கயத்தாரிலிருந்து வரும் ஜோதி பசுவந்தனை, கீழமுடிமன், சிலோன்காலனி, ஓட்டப்பிடாரம், ஊமைத்துரை தோரண வாயில் வழியாக எடுத்துச் செல்ல வேணடும். திருச்செந்தூர் கோவில், கோவில்பட்டி, சிந்தலக்கரை வைப்பாரிலிருந்து வரும் ஜோதிகள் குறுக்குச்சாலை ஊமைத்துரை தோரண வாயில் வழியாகவும், திருநெல்வேலியில் இருந்து வரும் ஜோதி புதுக்கோட்டை - தட்டப்பாறை வழியாகவும் வந்து அனைத்து ஜோதிகளுக்கும் உரிய முன்அனுமதி பெற்று ஓட்டப்பிடாரம் வழியாக சந்ததியினர் குடியிருப்பு தோரண வாயில் முன்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

22. ஜோதி எடுத்து வரும் நபர்கள் ஆலய விழா கமிட்டியாளர்களால் அனுமதி பெற்று கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

23. ஜோதி எடுத்து வரும் வாகனங்கள் மற்றும் விழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் பார்க்கிங் பகுதியில் காவல்துறையினர் சொல்லும் இடங்களில் தான் முறையாக வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களில் முறையற்ற வகையில் நிறுத்தகூடாது.

24. அருள்மிகு வீரசக்க தேவி ஆலய ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் முறையான அனுமதி பெற்றும், ஒலிப்பெருக்கிகள் இரவு 10.00 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது.

25. ஜோதி எடுத்து வருவோர்கள் 12.05.2023ம் தேதி மாலை 06.30 மணிக்குள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் கொண்டு வர வேண்டும்.

26. ஜோதி எடுத்து வருபவர்களுடன் டாரஸ் லாரி போன்ற கனரக வாகனம் கொண்டு வர அனுமதி கிடையாது.

27. விழா கமிட்டியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

28. வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டின் இடதுபுறமாகவே செல்ல வேண்டும். எதிரே வரும் வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.

29. ஜோதி ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு வரும் பட்சத்தில் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு வழக்கும் பதிவுசெய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

30. ஜோதி எடுத்து வரும் குழுவினர் எந்த ஒரு இடத்திலும் கூடாமல் பொதுமக்களுக்கு இடையூறு செய்யா வண்ணம் சீராக வந்து கொண்டே இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலய விழாக்களை எவ்வித அசம்பாவிதமின்றி விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அனைத்து ஒத்துழைப்யையும் பொதுமக்கள் தரவேண்டும் என்றும், மேற்படி விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via