எம்.ஆர். விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்கள் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு.

by Admin / 24-07-2021 05:40:50pm
எம்.ஆர். விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்கள் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு.


அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு.


 கடந்த 2016-2021 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம் ஆர் விஜயபாஸ்கர். இவர் அவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பேரிலும் மற்றும் அவளுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பெயரிலும் தனது பணி காலத்தில் இருந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக கடந்த  ஜூலை மாதம் 21ஆம் தேதி அவர்கள் மீது கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த விசாரணையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் நேற்று காலை முதல் இரவு வரை எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தமிழகம் முழுவதும் 26 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரான எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தி.மு.க ஆட்சி அமைத்துவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு  எதிராக எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பதால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via