ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

by Staff / 25-08-2023 02:20:27pm
ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் சின்னமணி (வயது 32). சென்னையில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிக்க அதே ஊரில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், நிலை தடுமாறி சின்னமணி ஏரிக்குள் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய அவரை, அவரது நண்பர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி அறிந்த கெடார் போலீசார், அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு சின்னமணியை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சின்ன மணியின் உடலை கெடார் போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via