மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையின் கழுத்தை மிதித்து கொலை

by Staff / 05-11-2023 05:23:10pm
மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையின் கழுத்தை மிதித்து கொலை

சேலம், ஓமலூர் வட்டம், கருப்பூர் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (54)இவர் வெல்டிங் தொழிலாளி இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு விக்னேஷ் (20) கோபிநாத் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
விக்னேஷ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மது குடிக்க தனது பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.இந்த நிலையில், கடந்த மாதம் 29 ம் தேதி விக்னேஷ் மது குடிக்க பணம் கேட்டு தந்தை சுப்பிரமணியிடம் தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தந்தையை வீட்டுக்குள் இழுத்துச் சென்று அவரை தாக்கி கழுத்தின் மீது காலைவைத்து மிதித்ததாக கூறப்படுகிறது.இதில் சுப்பிரமணி மயங்கி விழுந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தத நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து காவல் ஆய்வாளர் மனோன்மணி, வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தார். மது குடிக்க பணம் தராததால் மகனே தனது தந்தையின் கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via