பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்

by Staff / 05-02-2024 12:54:20pm
பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்

கணவரின் கொடுமை குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயில் முன்பு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று மனு கொடுக்க வந்த சிவகிரி தாலுகா, வெள்ளாளன்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வராணி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்னர் போலீசார் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, செல்வராணி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.அதை பார்த்த காவலர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அருகாமையில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, செல்வ ராணியின் கணவரான முத்துராஜ் என்பவர் அவரது சகோதரர்களுடன் வந்து தன்னையும் தனது மகனான முத்தமிழ் செல்வனையும் குடிபோதையில் தாக்குதல் நடத்தி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லை எனவும் கூறினார்.

மேலும், கடந்த மாதம் 29ஆம் தேதி இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்று புகார் கொடுத்த நிலையில், அந்த புகார் தொடர்பாக புளியங்குடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த விசாரணையில் தனக்கு திருப்தி இல்லை எனவும், அந்த விசாரணையானது ஒரு சார்பாக நடைபெறுவதால் எனக்கு நியாயம் வேண்டி தற்போது புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், தனது உயிருக்கும், தனது மகன் உயிருக்கும் தனது கணவரான முத்துராஜ் என்பவரால் ஆபத்து உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அந்த பெண் கொடுத்த மனுவை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தென்காசி போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏராளமான போலீசாரின் பாதுகாப்பை தாண்டி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயில் முன்பு தலையில் மண்ணெண்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்
 

Tags :

Share via