காங்கோவில் சோகம் - ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

by Admin / 04-08-2021 01:09:58pm
காங்கோவில் சோகம் - ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

 


காங்கோவில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 70க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டாங்கன்யிகா மாகாணத்தில் டாங்கன்யிகா என்கிற ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் டாங்கன்யிகா ஏரியில் 80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றது. ஏரியின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது.
 
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.‌ இதையடுத்து அங்கு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

இந்த விபத்தில் சிறுவர்கள் 7 பேர் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே வேளையில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 76 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Tags :

Share via