நகைக்காக மூதாட்டியை படுகொலை செய்த பெண் உட்பட இருவர் கைது

by Staff / 15-04-2024 02:36:18pm
நகைக்காக மூதாட்டியை படுகொலை செய்த பெண் உட்பட இருவர் கைது

கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியில் மூதாட்டியை கொன்ற வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அடிமாலி குரியன்ஸ் மருத்துவமனை சாலையில் வசித்து வந்த பாத்திமா காசிம் (70) கொலை வழக்கில் கொல்லத்தைச் சேர்ந்த அலெக்ஸ், கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரும் பாலக்காட்டில் இருந்து கைது செய்யப்பட்டனர். பாத்திமா காசிம் சனிக்கிழமை மாலை அவரது வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த மகன் பாத்திமா ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். அவரது கழுத்தில் இருந்த தங்க நகையையும் காணவில்லை. வீட்டிற்குள் மிளகாய் பொடியும் தூவப்பட்டிருந்தது.

கொள்ளை முயற்சியின் போது கொலை நடந்துள்ளது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, உள்ளூர்வாசிகளின் வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். மூதாட்டியை கொன்று திருடிய தங்க நகையை இருவரும் அடிமாலியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வீடு வாடகைக்கு வேண்டும் எனக்கூறி அடிமாலிக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். நகை அடகு வைக்கும்போது கொடுத்த மொபைல் எண்ணின் ஓடிபி-யை ஆதாரமாக கொண்டு போலீசார் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர்.

 

Tags :

Share via