கொரோனா 3வது அலையை தடுக்க  கட்டுப்பாடுகளை நீட்டிக்க வாய்ப்பு  மு.க.ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 06-08-2021 04:07:07pm
கொரோனா 3வது அலையை தடுக்க  கட்டுப்பாடுகளை நீட்டிக்க வாய்ப்பு  மு.க.ஸ்டாலின் ஆலோசனை


கொரோனா 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா என்பது குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று 2 மாதத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது.


இதனால் பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்-ரெயில் போக்குவரத்தும் இயக்கப்பட்டன. கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியது.


இந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஏற்படும் என மருத்துவ நிபு ணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அரசு மிகுந்த கவனத்துடன் மக்கள் கூடும் பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு கள், மாநகராட்சி கமி‌ஷனர்கள் தேவையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அரசு அதிகாரம் வழங்கியது.


அதன்படி சென்னையில் தி.நகர் ரெங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாரிமுனை பகுதி, புரசைவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள் திறக்க 9 ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
இதே போல் தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது. கோவையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த ஆங்காங்கே விழிப்பு ணர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது.


இதனால் தமிழக எல்லையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் 3-வது அலை தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் வருகிற 9-ந்தேதியுடன் தற்போது உள்ள ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவ நிபுணர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.


கொரோனாவை கட்டுப்படுத்த 9-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் தளர்த்தாமல் இப்போது உள்ளது போல் நீடிக்கலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கவும், கொரோனா விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்திற்கு பின் ஊரடங்கு தொடர்பாக, அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via