சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்மலாதேவி மேல்முறையீடு

by Staff / 08-05-2024 01:27:12pm
சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்மலாதேவி மேல்முறையீடு

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி மேல்முறையீடு செய்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் பேரம் பேசி தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது. நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், நிர்மலாதேவிக்கு ஏப்.30ஆம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில், தன் மீதான தண்டனையை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இடைக்கால ஜாமின் கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

Tags :

Share via