கடல் எல்லை பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஹோவர்கிராப்ட் ரோந்துக் கப்பலில் சென்று ஆய்வு

by Editor / 21-06-2024 11:44:39pm
கடல் எல்லை பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஹோவர்கிராப்ட்  ரோந்துக் கப்பலில் சென்று ஆய்வு

தனுஷ்கோடியை அடுத்த இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஹோவர்கிராப்ட்  ரோந்துக் கப்பலில் சென்று ஆய்வு செய்தார்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்வில்  கலந்து கொள்வதற்காக நேற்று (20) சிறிய ரக ராணுவ விமான மூலம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய கடற்படை  மற்றும் கடலோர கடற்படை காவல் படை முகாம் களை ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரம் கடல் பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும்  கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார்.

இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர்  பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில்  நடைபெற்ற யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார்.

அதனை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வரை சென்று கடலுக்கு மத்தியில்  அமைந்துள்ள மணல் திட்டில் இறங்கினார்.

பின்னர் சர்வதேச கடல் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கண்காணிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தவுடன் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
 

 

Tags : இணை அமைச்சர் ஹோவர்கிராப்ட் ரோந்துக் கப்பலில் சென்று ஆய்வு

Share via