2 வாரங்களாக 2000 அளவிலேயே  கொரோனா பாதிப்பு:   சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 

by Editor / 16-08-2021 04:13:30pm
2 வாரங்களாக 2000 அளவிலேயே  கொரோனா பாதிப்பு:   சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 



கடந்த 2 வாரங்களாக 2000 அளவிலேயே தினசரி கொரோனா பாதிப்பு இருக்கிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:


தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக 2000 அளவிலேயே தினசரி கொரோனா பாதிப்பு இருக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சற்று குறைகிறது. மருத்துவ கல்லூரிகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.


பெரும்பாலன மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எல்லா மாணவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வரும் வரை சில மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மதம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்கள் அதிகமாகக் கூடுவதால் தொற்று அதிகமாகிறது.

32 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.


தமிழகத்தில் தொற்று விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது. கோவையில் 2%, தஞ்சாவூரில் 2% என 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விட தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. டெங்கு தடுப்புப் பணிகளையும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via