கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை-தருமபுரம் ஆதீனம் .

by Editor / 17-12-2024 10:51:54pm
கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை-தருமபுரம் ஆதீனம் .

தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மார்கழி மாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டார்.நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் திருக்குவளை ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் யாத்திரை மேற்கொண்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆகிய இடங்களில் யாத்திரை மேற்கொண்டார். 

இக்கோயில்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் செய்தியாளரிடம் கூறியதாவது,இந்த அரசு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அனுமதி வழங்கி வருகிறது.கடந்த காலங்களில் கும்பாபிஷேக அனுமதி பெறுவதற்கே ஆண்டு கணக்கில் ஆகும்.தற்போது எல்லாம் முகூர்த்த நாள்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதில் இந்த அரசு சாதனை புரிந்து வருகிறது. 

கோயில்களில் உள்ள அர்த்தமண்டபங்களில், சைவ ஆலயங்களில் சிவாச்சாரியார்கள், வைணவ ஆலயங்களில் பட்டாச்சாரியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றில் இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.போக சக்தி, யோக சக்தி நிறைந்த மகா மண்டபத்திலிருந்து தான் அனைவரும் இறைவனை வழிபட முடியும்.ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஆனாலும் இதனை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என இளையராஜா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு குறித்து முழுமையாக தெரிய வராததால் யார் மீது குற்றம் என்று கூற முடியாது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. நான் நேரடியாகவே அதை பார்த்துள்ளேன்  பூஜை காலங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் உண்டு. இவ்வாறு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தெரிவித்தார்.

 

Tags : கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை-தருமபுரம் ஆதீனம் .

Share via

More stories

Logo