தோரணமலை கோவில் நுழைவு வாயில் முருகன் சிலை உடைப்பு- வாலிபர் கைது

by Admin / 20-08-2021 01:51:42pm
தோரணமலை கோவில் நுழைவு வாயில் முருகன் சிலை உடைப்பு- வாலிபர் கைது

தென்காசி அருகே தோரணமலை கோவில் நுழைவு வாயில் முருகன் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான நுழைவு வாயில் மாதாபுரத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயில் பகுதியில் கோவில் உண்டியல் உள்ளது. அதன் அருகே முருகன் சிலை ஒன்றும் இருந்தது.

இந்த சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது 31) என்பவர் நேற்றிரவு மதுபோதையில் முருகன் சிலையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

 

Tags :

Share via