மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா

தமிழக அரசியலில் தனக்கென தனி இடம் பதித்த பெண் தலைவரான, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
திரையுலகில் நிகரில்லா ஒரு நடிகை. தமிழ்நாடு அரசியலில் அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர். மாநில உரிமைக்காக குரல் கொடுத்த போராட்ட குணத்திற்கு சொந்தக்காரர். இந்திய அரசியல் களத்தில் எதற்கும் அஞ்சாமல் துணிந்து முடிவெடுத்த பெண் ஆளுமை. அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரை விட அதிக தேர்தல்களிலும், அதிக தொகுதிகளிலும் அக்கட்சியை வெற்றி பெற வைத்தவர். அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாகவும் வாக்கு வங்கியில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் அதிமுகவை மாற்றியவர்.
எம்ஜிஆர் காலத்தில் சத்துணவு திட்டத்திற்கான முகமாக இருந்தவர், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக உயர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உச்சம் தொட்டவர். பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என பெண்களுக்காக இவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். தொட்டில் குழந்தைத் திட்டத்தால் பல மாவட்டங்களில் ஆண்-பெண் விகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.மாணவர்களுக்கு சைக்கிள்,இலவச மடிக்கணினி,உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்த சரித்திரபெண்ணாக விளங்கிய அவருக்கு இன்று 77 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
Tags : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா