“2019ஆம் ஆண்டு முதல் இணை பிரியாமல் இருக்கிறோம்-முதலமைச்சர் ஸ்டாலின்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாட்டின் 2 ஆம் நிகழ்வாக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சிபிஎம் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,தூங்கா நகரம் இன்று சிவப்பு மாநகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதை பார்த்து முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகிறேன். திமுக கொடியில் மட்டுமல்ல எங்களில் பாதியும் நீங்கள் தான். திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் கருத்தியல் நட்பு இருப்பதால் தான், இந்த மாநாட்டுக்கு நான் வந்துள்ளேன். தன்னை ஒரு கம்யூனிஸ்ட் எனவே அடையாளப்படுத்தி கொண்டவர் கருணாநிதி. கார்ல் மார்க்சுக்கு சிலை வைப்பதாக அறிவித்து விட்டு உங்களில் பாதியாக இங்கு வந்திருக்கும் என் பெயர் "ஸ்டாலின்"
நமது பயணமும் பாதையும் மிக நீண்டது. 2019 முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். யாரை எதிர்க்க வேண்டும் என தீர்க்கமாக இயங்குகிறோம். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என சிலர் நப்பாசையில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. இங்கு இருக்கிற யாரும் அதற்கு இடம் தர மாட்டோம்.
கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகி விட்டது. ஒன்றிய அரசால் அதிகப் பாதிப்படைவது நானும், கேரள முதல்வரும் தான். எனவே எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம். கூட்டாட்சிக்கு எதிரான பாசிச அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. நரேந்திர மோடியின் ஆட்சி தான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த ஒன்றிய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தி ஆக வேண்டும்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். ஒன்றிய - மாநில அரசு உறவை மேம்படுத்த சர்க்காரியா, பூஞ்சி கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என 2012ல் முதல்வராக இருந்த மோடி கேட்டார். மூன்றாம் முறையாக பிரதமராக ஆகி உள்ள மோடி அவர்களே, உங்கள் கோரிக்கை மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளை பறிக்கிரீர்கள்.
எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை முழுநேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கிறீர்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறீர்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு. மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில் தான் இந்தியாவில் கூட்டாட்சி மலரும். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவோம். இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்" என தெரிவித்தார்.
Tags : “2019ஆம் ஆண்டு முதல் இணை பிரியாமல் இருக்கிறோம்-முதலமைச்சர் ஸ்டாலின்.