2–ம் கட்ட பணி: சென்னையில் 6 மேம்பாலங்களின் மேல் மெட்ரோ ரெயில் பாதை

by Editor / 23-08-2021 05:03:50pm
2–ம் கட்ட பணி: சென்னையில் 6 மேம்பாலங்களின் மேல் மெட்ரோ ரெயில் பாதை

 

சென்னையில் தொடங்கி உள்ள மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான 2-ம் கட்ட பணியில் மாநகர பகுதியில் உள்ள 6 மேம்பாலங்களின் மேல் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது

சென்னையில் 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரம் கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் தொடங்கி உள்ளன. இவை வருகிற 2026-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கிய பின்னர் மாநகரத்தின் முக்கிய இடங்களில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும், சொகுசாகவும் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க முடியும்.

தற்போது தொடங்கப்பட்டு உள்ள இந்த 2-ம் கட்ட பணியில் சென்னை மாநகரில் மெட்ரோ ரெயிலுக்கான உயர்மட்ட பாதை சுமார் 6 மேம்பாலங்களுக்கு மேல் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு, வடபழனி, திருமங்கலம், போரூர் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை ஆகிய 6 இடங்களில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

நேரு பூங்காவிற்கும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிப்காட்டுக்கும் இடையே உள்ள 21 கிலோ மீட்டர் பாதையில் இன்னும் கட்டப்படாத மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ ரெயில் சேவைக்கான உயர்த்தப்பட்ட பாதை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை கத்திப்பாரா சந்திப்புக்கு மேலே 23 மற்றும் 27 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள 2-ம் கட்ட பாதைகள் 38 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.

போரூரில் உள்ள தெற்கு புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம் மற்றும் ஐ.டி. வடபழனியிலும் உயர்த்தப்பட்ட பாதைகள் தற்போதுள்ள முதல் கட்ட பாதைக்கும் மேல் இருக்கும்.

திருமங்கலத்தில் உள்ள மேம்பாலம் மற்றும் கோயம்பேட்டில் உள்ள 100 அடி சாலையின் குறுக்கே சுமார் 28 மீட்டர் உயரத்தில் இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் போரூர் மற்றும் பூந்தமல்லியில் உள்ள மேம்பாலங்களில் சுமார் 33 மீட்டர் முதல் 37 மீட்டர் வரை உயர்த்தப்பட்ட பாதை வர உள்ளது. சென்னை புறவழிச்சாலை மற்றும் வெளிப்புற வளைய சாலையில் உள்ள சாலை பிரிப்புகளின் மேலே உயர்த்தப்பட்ட பாதைகள் தவிர, ஆழ்வார்திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே 3 கிலோ மீட்டர் நீளம் இரண்டு அடுக்கு உயர்மட்ட மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட பாதைகள் கட்டுமானத்தை வேகமாக செய்வதற்காக யு வடிவிலான கான்கிரிட் கட்டுமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட பணியில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் மேம்பாலத்தின் கீழே எந்த இடையூறும் இருக்காது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க, கோடம்பாக்கம், தியாகராயநகரில் உள்ள பசூலுல்லா சாலை மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலங்களின் தொழில்நுட்ப விவரங்களை வழங்கி உள்ளோம் என்றனர்.

அதேபோல், மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, மாநகரில் எங்கள் பராமரிப்பில் உள்ள மேம்பாலங்களுக்கு மேலே மெட்ரோ ரெயில் உயர்மட்ட பாதைக்கான கட்டுமானம் குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாததுடன், எங்கள் கட்டமைப்புகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்துடன் மட்டுமே எங்கள் மேம்பாலங்களுக்கு மேலே கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

 

Tags :

Share via