வார இறுதி நாட்களில் கோவில் திறப்பு  எப்போது? பி.கே.சேகர்பாபு பேட்டி

by Editor / 05-10-2021 04:29:44pm
வார இறுதி நாட்களில் கோவில் திறப்பு  எப்போது? பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தில் அவரது பிறந்த நாளான இன்று (5 ந் தேதி) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அமைச்சர் பேசும்போது, சென்னை ஏழு கிணறு பகுதியில் 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார், இந்த இல்லத்தில் 33 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் அவதரித்த இந்த நாளில் அவர் வாழ்ந்த இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


சமத்துவம், பசி என்பது நாட்டில் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற வள்ளலாரின் அரும்பணிகளை பெருமை படுத்தும் விதமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான வரைபடங்கள் கோரி விளம்பரப்படுத்தியுள்ளோம். விரைவில் டெண்டர் கோரப்பட்டு வள்ளலார் சர்வதே மையம் வெகு விரைவில் கட்டப்படும். மேலும், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்க அரசு உதவி செய்யும்.


முதலமைச்சர் அதிவேகமாக மக்கள் நலப்பணிகளை செய்வதால் டேஞ்சரஸ் (Dangerous) என எச்.ராஜா கூறியிருக்கலாம். முதலமைச்சர் சுயமாக சிந்தித்து, சுயமாக முடிவெடுப்பதால்தான் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சுயமாக சிந்திப்பதால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக்கியுள்ளனர். முதலமைச்சர் சிந்தனை சரியில்லை என கூறியவரின் சிந்தனை சரியில்லததால்தான் அவரது கட்சியிலே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.


அன்னை தமிழில் வழிபாடு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பாரதீய ஜனதா போராட்டம் நடத்துகின்றது.


ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படியே கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது. வார இறுதி நாட்களிலும் திருக்கோவில்களை திறக்கக்கோரி பாரதீய ஜனதா போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த நிலை ஆண்டு முழுவதும் தொடராது என்றும் கொரோனாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் கோவில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via